மதுரைக்கு போறேனடி.

19 மே 2010

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

மதுரைக்கு போறேனடி - என்
மாமன்கிட்ட பொண்ணு கேட்க …
அம்மன் கோயில் சாட்சியோட
சீதனமா உன்னை கேட்க !..

ஆயிரங்கால் மண்டபமும்
சாயுங்கால சூரியனும்
வீசுகின்ற தென்றலோடு
பேசுகின்ற மல்லிகையும்
வாழ்கின்ற மதுரையில
வாழ்ந்து வந்த தேவதையை,
கொண்டு போக வரம் கேட்பேன் …
உங்கப்பன்கிட்ட தினம் கேட்பேன் !…

தூங்காத இரவுகளும்
பொங்கி வரும் கனவுகளும்
பேசாத வார்த்தைகளும்
புரியாத அர்த்தங்களும்
கேட்காமலே கொடுத்தவ நீ …
கொடுத்தவளை கேட்க போகிறேன் !…

நீ போட்ட கோலம் போல
பூப்போட்ட தாவணியில்
அழகழகா சிரிச்சிக்கிட்டு
என் உசுர பறிச்சிக்கிட்டு
நீ பண்ண கொடுமையெல்லாம்
சொல்லப் போகிறேன் உங்கப்பன்கிட்ட !..

ஜல்லிக்கட்டு காளையை போல்
துள்ளிக்கிட்டு திரிஞ்சாலும்
கண்ணுக்குட்டி உன்னை விட்டு
தள்ளி தள்ளி நிக்குறது
மாமன் சொல்லும் சொல்லுக்காக !…
தமிழ்மதுரை மண்ணுக்காக !…

பஞ்சுக்குள்ள நெருப்ப வச்சி
பத்திரமா பாத்தாலும்
பத்திக்கிட்டு போகுமின்னு
பக்குவமா சொல்ல போறேன் !..

நெஞ்சுக்குள்ள ஓடி வந்து
கொஞ்சி விட்டு போனவள
சொந்தம் பேச வர போறேன் …
சொந்தக்காரன் ஆகப் போறேன் !..

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  புத்தகங்கள்  |  வலையூட்டம்  |  வளையொலி  |  Blog

பொதுவுடைமை @ 2009.