அவள்.

30 ஆகஸ்ட் 2011

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

அணுவின் துகளை நெஞ்சில் வீசி
அருகில் நின்று அழகாய் சிரித்தாள்.
ஆயிரம் எரிமலை என்னுள் வெடிக்க
குளிரும் இரவில் கைகள் கோர்த்தாள்.

நானும் நானென அவளும் அவளென
இருப்பது பிடித்தது - இருமுறை சொன்னாள்.
இரவும் பகலும் உன்னுடன் இருந்தும்
எல்லை மீறா கண்ணியம் என்றாள்.

பெண்மையின் மென்மையை அறியாத ஆண்மை
கேலிகள் செய்து கோபங்கள் தந்தாள்.
கோபத்தில் ஒருமுறை அறைந்திட வேண்டும்
கன்னங்கள் காட்டி பலமுறை கேட்டாள்.

உறவுகள் மத்தியில் பேசிய பொய்கள்
உன்னிடம் மட்டும் உண்மை என்றாள்.
உதடுகள் அதனை சொல்லும் முன்னே
கண்ணில் சிறுதுளி நீருடன் நின்றாள்.

முழுவதும் உன்னை தெரிந்திட வேண்டும்
கேள்வி கணைகள் ஆயிரம் தொடுத்தாள்.
இதுவரை நானும் அறிந்திரா உறவை
உயிரில் ஊட்டி உணர்ந்திட சொன்னாள்.

அன்பாய் தோளில் சாய்ந்து கொண்டு
மழலை மொழியில் கதைகள் சொன்னாள்.
தென்றல் கூந்தலை கலைக்கும் போது
கிறங்கும் கண்ணில் ஒழுக்கம் தொலைத்தாள்.

தனியே இரவில் சிணுங்கும் நிலவை
கவிதைகள் பாடி தூங்க வைத்தாள்.
சூரியன் வந்து உதிக்கும் போதும்
இன்னும் கொஞ்சம் நேரம் என்றாள்.

உன்னுடன் இருக்கும் நேரம் யாவும்
காலைப் பூவின் பனித்துளி என்றாள்.
தனியே நானும் தவிக்கும் தருணம்
தீயில் இட்ட இறகுகள் என்றாள்.

யாருமற்ற சாலை முடிவில்
மீண்டும் ஒருமுறை நடப்போம் என்றாள்.
பிரிவுகள் அற்ற உறவுகள் வேண்டும்
பிரியும் நேரம் கண்ணால் சொன்னாள்.

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  புத்தகங்கள்  |  வலையூட்டம்  |  வளையொலி  |  Blog

பொதுவுடைமை @ 2009.