போகாதீங்க மாமா.

13 செப்டம்பர் 2011

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

பஞ்சு மெத்தை தலைகாணி
பன்னீர் தெளிச்சு வச்சாலும்
பாவிமக கண்ணுக்குள்ள
தூக்கம் மட்டும் இல்ல மாமா !…

கண்ணுக்குள்ள நீயிருக்கன்னு
கண்ணு முழிச்சி நான் கெடக்கேன்
தனியா என்னை தவிக்க விட்டு
தூரதேசம் போனதேன் மாமா !…

பொறையேறி விக்கும் போதும்
கண்ணு கலங்கி நிக்கும் போதும்
உள்ளுக்குள்ள சிரிப்பு மாமா !…
உன்னோட நெனைப்பு மாமா !…

மல்லிப்பூவு வாசம் உனக்கு
மனசு பூரா புடிக்குமுன்னு
குண்டுமல்லி பூவச்சூடி
பூவப் போல இருக்கேன் மாமா !…

லவுக்கை இல்லா மாராப்பு
மச்சான் உனக்கு புடிக்குமுன்னு
கந்தாங்கி சீலை கட்டி
கச்சிதமா இருக்கேன் மாமா !…

குட்டி குட்டி ஆசையெல்லாம்
எட்டி எட்டி பாக்குது மாமா !…
எட்டு வாளி தண்ணி இறைச்சும்
காய்ச்சல் மட்டும் போகல மாமா !…

நேந்துவிட்ட காளையெல்லாம்
மீசை வளர்த்து சுத்துது மாமா !…
நீயில்லாத சாமத்துல
வீட்டுக் கதவ தட்டுது மாமா !…

வாடாமல்லி வாடுமுன்ன
வண்டி வச்சி வந்துடு மாமா !…
நெலாவும் பூமியும் உலாவுற வரைக்கும்
என்னை விட்டு போகாதீங்க மாமா !…

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  புத்தகங்கள்  |  வலையூட்டம்  |  Blog

பொதுவுடைமை @ 2009.