பிரிவென்னும் ஒரு சொல்.

26 டிசம்பர் 2011

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

பிரிவென்னும் ஒரு சொல்லின், அறியாத பொருளொன்று
உனை பிரிந்த ஒரு நாளில், முழுவதுமாய் புரிந்ததடி …
விழி பேசும் மொழி ஒன்று, சிறுதுளியாய் விழுமென்று
துணை பேச நீயின்றி, தனியாக கண்டேனடி …

நெடுநாட்கள் நான் மறந்த, நிலவோடு பேசுகிறேன்
தொடுவானம் வரை பறந்த, நினைவுகளை யோசிக்கிறேன்
குளிர்தென்றல் எனை தீண்ட, உன் சுவாசம் தேடுகிறேன்
நள்ளிரவில் தனியாக, உன் பெயரை பாடுகிறேன் …

விரல் வரைந்த கோலங்கள், துணி மறந்த நேரங்கள்
போர்வைக்குள் இருவரும் போர் புரிந்த காலங்கள்
எனை வந்து கொல்லுதடி… என்னுயிரை மெல்லுதடி
தாலாட்டு முத்தமின்றி உயிர் பிரிந்து செல்லுதடி …

பனி உறையும் நள்ளிரவும் தனிமையிலே தவிக்குதடி
உன் மூச்சு வெப்பத்தில் குளிர் காய துடிக்குதடி
அதிகாலை சூரியனும் மெதுவாக உதிக்குதடி
நம் வீட்டு ரோஜாக்கள் மொட்டு விட மறுக்குதடி…

சிறு உளியும் மலை பிளக்கும்
சிறு பிரிவும் உயிர் பிளக்கும்
பிரிவுற்று துயரடையா உறவொன்றை தந்து விடு
கடல் சேர்ந்த மழை நீராய் என்னுயிரில் நின்று விடு !…

காத்திருக்கிறேன் காதலுடன் !…

முகப்பு > தொகுப்புகள் > கவிதை

டுவிட்டரில் பகிர
முகநூலில் பகிர

<< பழையன புதியன >>


முகப்பு  |  புத்தகங்கள்  |  வலையூட்டம்  |  வளையொலி  |  Blog

பொதுவுடைமை @ 2009.