Sunday, October 30, 2011

நெடுஞ்சாலை இரவுகள் ...


விண்ணில் இருந்த தேவதை, மண்ணுக்கு வந்த நேரமோ
கண்ணன் என் மனதினில் பூங்கோதையின் ராகமோ
தன்னந்தனியே நிலவும் வானில் என்ன செய்யுமோ
உன்னைப் பிரிந்த வலியில் தேய்ந்தொழிந்து போகுமோ

ரயில் போகும் பாதையாய் நாமிருவர் செல்ல
கைகோர்க்கும் நேரத்தில் பூ மலரும் மெல்ல
உயிர் திருடும் முயற்சியில் என் கண்கள் வெல்ல
அதையுணர்ந்த கைகள் இடையணைத்து கொள்ள

கைதொடும் தூரத்தில் வெண்ணிலவு இருக்க
நான்தொடும் நேரத்தில் சொர்க்கமது திறக்க
வானவெளி வீதியில் நாமிருவர் மிதக்க
நட்சத்திர சாரலில் பூமிதனை மறக்க

நெடுஞ்சாலை இரவுகள் நம் காதல் சொல்லுதே
புலராத பொழுதுகள் நமைப் எழுப்பி செல்லுதே
தனிமையின் இனிமையில் இருவுயிர் குளிருதே
பனித்துளி ஒன்றிங்கே சூரியனை அணைத்ததே

உயிருள்ள சிற்பமாக,உறையட்டும் இந்த நொடி ...
பூந்தென்றல் வாசமாக, வீசட்டும் நம் காதல் நெடி ...
உயிரை வருடும் உணர்வினில் எல்லாம்
உயிர்த்திருப்போம் அது போதுமடி !...

Thursday, October 20, 2011

அணு - அதிசயம் - அற்புதம் - அபாயம் -- புத்தகவிமர்சனம்


"அணுவின் துகளை நெஞ்சில் வீசி, அருகில் நின்று அழகாய் சிரித்தாள்" - என் காதலியை பற்றி நான் எழுதிய ஒரு கவிதையின் தொடக்கம் இப்படி. ஆனால் அந்த கவிதை எழுதும் போது அணுவை பற்றி எனக்கு தெரிந்ததெல்லாம் அணுகுண்டு, அணு உலை மட்டும் தான். அணுகுண்டு வெடிக்கும். அணு உலையில் இருந்து கதிரியக்கம் வெளிப்படும். அவ்வளவு தான். இந்த புத்தகத்தை படித்து முடித்தவுடன், அணுவை பற்றிய என் கருத்துக்கள் அனைத்தும் மூடநம்பிக்கைகளாக தெரிந்தன. ஆசிரியருக்கு நன்றி.

அணுக்களை பற்றி மிக அடிப்படையான விஷயத்தில் இருந்து ஆரம்பித்து, மிக ஆழமான அறிவியல் கோட்பாடுகள் வரை நம்மை அழைத்து செல்கிறார். மிக இயல்பான உரைநடையில் அறிவியலை திகட்டாமல் ஊட்டுகிறார். முதல் அத்தியாயத்திலேயே ரசவாதத்தை பற்றி விவாதித்து, அது ஏன் சாத்தியமில்லை என்பதை அணுக்களின் மொழியில் விளக்குகிறார்.

கதிரியக்கம், அணுபிளப்பு, அணுசேர்க்கை, அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு போன்றவற்றை பற்றி விளக்கும் போது, அவை உருவாக்கபட்ட காலநிலைகள், விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறு, அரசியல் சூழ்நிலைகள் என ஒரு கதையை போல் அழகாக சொல்லி இருக்கிறார். அணுசேர்க்கை, அணுபிளப்பு ஆகியவற்றுக்கு தனித்தனி அத்தியாயங்கள் ஒதுக்கி விரிவாக விளக்குகிறார். அணுசேர்க்கை கட்டுப்படுத்தப்பட்ட நிலைகளில் சாத்தியமானால் உலகத்தின் மின்சாரத் தேவையை கதிரியக்க ஆபத்துக்கள் இல்லாமல் பூர்த்தி செய்ய முடியும் என்பது எனக்கு புதிய செய்தி. அணுக்கள் மட்டும் இல்லாமல், கடைசி சில அத்தியாயங்களில் சூரியன், நட்சத்திரம், அண்டவெளி, பொருள், எதிர்பொருள் என முழுவதையும் அழகாக விளக்குகிறார்.

இந்த புத்தகத்தில் ஒரே குறை. மிக நீளமான அத்தியாயங்கள். அளவை குறைத்து இருக்கலாம், அல்லது பல அத்தியாயங்களாக பிரித்து இருக்கலாம். அறிவியலில் ஆர்வம உள்ளவர்களுக்கு இது படிக்க வேண்டிய புத்தகம். அறிவியல் பற்றி தெரியாதவர்கள் இதை படித்தால், கண்டிப்பாக அறிவியலில் ஆர்வம வரும் என நம்புகிறேன்.

இந்த புத்தகத்தில் இருந்து பல புதிய அறிவியல் வார்த்தைகளை தமிழில் கற்றுக்கொண்டேன். அவற்றுள் சில.

ரசவாதம் - Alchemy
அணுபிளப்பு - Nuclear Fission
அணுசேர்க்கை - Nuclear Fusion
கதிரியக்கம் - Radio Activity
கதிரியக்க அணுச்சிதைவு - Radioactive Decay
கன நீர் - Heavy Water
நிலக்கரி தூசு - Fly Ash
அணு உலை - Reactor
ஈனுலை - Breeder Reactor

அணுவை பற்றிய ஆராய்ச்சிகள் மேலைநாடுகளில் தழைத்து வளர்ந்ததால் பெயர்கள் ஆங்கிலத்தில் இருப்பதில் வியப்பில்லை. என் மனதில் ஒரு கேள்வி. அத்தனை பெயர்களையும் தமிழ்ப்படுத்தலாமா?. அல்லது ஆங்கில வார்த்தைகளை அப்படியே அணைத்துக் கொள்ளலாமா ?

ஐசொடோப்பு - தமிழ் வார்த்தை என்ன?

இணையம் வழியே பெற இங்கே சுட்டவும்

Saturday, October 15, 2011

பூக்கள்



பூக்கள் சிரித்து முத்தமிடும்
பூக்கள் மெலிதாய் சத்தமிடும்
பூக்கள் காதலில் உளரும்
பூக்கள் மோதலில் அலறும

பூக்கள் கொதித்து எரியும்
பூக்கள் வெடித்து சிதறும்
பூக்கள் சிவந்து குளிரும்
பூக்கள் குளிர்ந்து மலரும்

பூக்கள் மீண்டும் சிரிக்கும் !...

பூக்களின் சாயத்தை
நடுசாமத்தில் வெளுத்தவளே ...
காமத்தின் ஆழத்தை
கண்மூடி காட்டியவளே ...

நரம்பெல்லாம் புடைக்க
தசையெல்லாம் இறுக்க
உடம்புக்குள் வெடிக்க
மூச்சங்கு அடைக்க
உயிருக்குள் வலிக்க
உதடுகள் சிரிக்க ...

நானறிந்த வித்தையின்
நானறியா பக்கத்தில்
நாம் எழுதிய ஓர் கவிதை
நாளும் சொல்லும் நம் உறவை !...

Friday, October 07, 2011

தேவதையே... தேவதையே...


வானவில்லில் கருவண்ணம் காணாமல் போனதென்ன
என்னவளின் புருவங்கள் என்றுதான் ஆனதென்ன
காதோரம் உன் மூச்சுக்காற்று சூடேற்றும் வேகமென்ன
அணிதிரண்ட உன்பெண்மை அநியாயம் செய்வதென்ன !...

இதழோடு இதழ் சேர்த்து உணவை நான் ஊட்டுவேன்
மடிமீது தலைசாய்த்து தினமும் தாலாட்டுவேன்
நாவால் உன் மேனியில் ஓவியம் பல தீட்டுவேன்
வள்ளுவனின் மூன்றாம் பாலை துளித்துளியாய் ஊற்றுவேன் !...

அணைத்தவுடன் எரியும் அதிசயம் உன் தேகமோ
நினைத்தவுடன் உருகும் புதுசுகம் தான் மோகமோ
என் காதல் நரம்புகளில் சிறுத்தையின் வேகமோ
செங்காந்தள் பூச்சூடிய பெண்மேனி தாங்குமோ !...

பல கோடி மின்னல்கள் எனை வந்து தாக்குதடி
உன்னுயிரில் நான் இணையும் அந்தவொரு நொடியிலே !...
சில நூறு ஜென்மங்கள் நான் வாழ்ந்து முடிக்கிறேன்
மார்போடு நீ சிணுங்கும் நள்ளிரவு வேளையிலே !...

மன்மத வெள்ளம் உன்னிடம் செல்லும்
உன்னத நேரம் நம் விழியோரம்
மோகத்தின் பேய்மழை மூர்க்கமாய் பெய்தும்
முடிக்கின்ற வேளையில் சாரலாய் காதல் !...

...
...
...

தேவதையே... தேவதையே...
தேன் சுரக்கும் பூவிதழே...
உன் தாய் சுமந்த தேகமதை
நான் சுமக்கும் காலம் எது ?...

Wednesday, October 05, 2011

கி.மு. கி.பி. - புத்தகவிமர்சனம்


நான் முதன் முதலில் வாசித்த மதனுடைய புத்தகம் "வந்தார்கள் வென்றார்கள்". மிக மிக அழகாக ஒரு நாவல் வடிவில் இருக்கும். வரலாறை அவ்வளவு சுவாரசியமாக சொல்ல மதனால் மட்டும் தான் முடியும் என்பது என் கருத்து. அன்று முதல், மதன் என்கிற பெயர் இருந்தால் போதும். அந்த புத்தகத்தை வாங்கி விடுவேன். இந்த புத்தகமும் அப்படித்தான். "கி.மு. கி.பி." என்று பெயர் வைத்திருந்ததால் மொத்த உலக வரலாறே இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், கி.மு. பற்றி மட்டுமே எழுதி இருக்கிறார். பிறகு ஏன் இந்த தலைப்பு என்று தெரியவில்லை. குமுதம் இதழில் ஒரு வரலாற்று தொடராக வெளிவந்து பெரும் பாராட்டை பெற்றது. இப்போது புத்தக வடிவில்.

முதல் "ஆதிமனிதன்" ஒரு பெண் என்பது விஞ்ஞானபூர்வமான உண்மை. இதுதான் இந்த புத்தகத்தின் முதல் வரி. ஆதாரம் : மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன் அவள் விட்டு சென்ற காலடித்தடம் மற்றும் மைட்டோ காண்ட்ரியல் டி.என்.எ.(Mitochondrial DNA). படித்தவுடன் எனக்கு தோன்றியது ஒரே விஷயம் தான். பத்து வருஷம் கழிச்சி, இதைவிட ஒரு பழமையான ஆணோட டி.என்.எ. கிடைத்தால் அறிவியல் உலகம் முதல் மனிதன் ஒரு ஆண் என சொல்லும். மிக சாதரணமான கேள்வி இது. மதனுடைய புத்தகத்தில் நான் எதிர்பார்த்தது, அறிவியல் சொல்லுவதை அப்படியே மொழிபெயர்க்காமல், அவருடைய நகைச்சுவை கலந்த திறனாய்வுடன் கூடிய கட்டுரைகள்.

இது கதையோ, கவிதையோ அல்லது அவருடைய சொந்த படைப்புகளோ அல்ல. உலக வரலாறு. படிக்கும் வாசகன் மனதில் ஆயிரம் கேள்விகள் நிச்சயம் எழும். அவற்றுக்கான பதில்களை அந்த புத்தகத்தினூடே சொல்லும் போது தான் அந்த புத்தகம் முழுமை பெறுகிறது என்பது என்னுடைய கருத்து. மற்றபடி, சுவாரசியம் குறையாமல் அழகாக வரலாறை சொல்கிறார்.

உலகம் தோன்றிய காலம், பரிணாம வளர்ச்சி, மனிதர்கள், நீயண்டர்தால் மனிதர்கள், பிரளயம் என ஆரம்பித்து பழங்கால நாகரிகங்கள், கிரேக்க வரலாறு, ஏதென்ஸ் வரலாறு, தத்துவங்கள் மற்றும் கலைகள் வளர்ந்த வரலாறு, வரலாற்றை செதுக்கிய முக்கிய சிற்பிகளின் வாழ்க்கை என முக்கியமான அனைத்தையும் தொட்டு செல்கிறார். கடைசி சில அத்தியாயங்கள் இந்திய மன்னர்கள் பற்றியும் விவரிக்கிறார். சந்திரகுப்தர், சாணக்கியர், அசோகர் என பலருடைய வாழ்கையை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

மொத்தத்தில் உலக வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு தமிழில் ஒரு நல்ல புத்தகம்.

இணையம் வழியே புத்தகமாக பெற இங்கே சுட்டவும்.

இணையம் வழியே ஒலி-புத்தகமாக பெற இங்கே சுட்டவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...