Tuesday, August 30, 2011

அவள் !


அணுவின் துகளை நெஞ்சில் வீசி
அருகில் நின்று அழகாய் சிரித்தாள் ...
ஆயிரம் எரிமலை என்னுள் வெடிக்க
குளிரும் இரவில் கைகள் கோர்த்தாள் ...

நானும் நானென அவளும் அவளென
இருப்பது பிடித்தது - இருமுறை சொன்னாள் ...
இரவும் பகலும் உன்னுடன் இருந்தும்
எல்லை மீறா கண்ணியம் என்றாள் ...

பெண்மையின் மென்மையை அறியாத ஆண்மை
கேலிகள் செய்து கோபங்கள் தந்தாள் ...
கோபத்தில் ஒருமுறை அறைந்திட வேண்டும்
கன்னங்கள் காட்டி பலமுறை கேட்டாள் ...

உறவுகள் மத்தியில் பேசிய பொய்கள்
உன்னிடம் மட்டும் உண்மை என்றாள் ...
உதடுகள் அதனை சொல்லும் முன்னே
கண்ணில் சிறுதுளி நீருடன் நின்றாள் ...

முழுவதும் உன்னை தெரிந்திட வேண்டும்
கேள்வி கணைகள் ஆயிரம் தொடுத்தாள் ...
இதுவரை நானும் அறிந்திரா உறவை
உயிரில் ஊட்டி உணர்ந்திட சொன்னாள் ...

அன்பாய் தோளில் சாய்ந்து கொண்டு
மழலை மொழியில் கதைகள் சொன்னாள் ...
தென்றல் கூந்தலை கலைக்கும் போது
கிறங்கும் கண்ணில் ஒழுக்கம் தொலைத்தாள் ...

தனியே இரவில் சிணுங்கும் நிலவை
கவிதைகள் பாடி தூங்க வைத்தாள் ...
சூரியன் வந்து உதிக்கும் போதும்
இன்னும் கொஞ்சம் நேரம் என்றாள் ...

உன்னுடன் இருக்கும் நேரம் யாவும்
காலைப் பூவின் பனித்துளி என்றாள் ...
தனியே நானும் தவிக்கும் தருணம்
தீயில் இட்ட இறகுகள் என்றாள் ...

யாருமற்ற சாலை முடிவில்
மீண்டும் ஒருமுறை நடப்போம் என்றாள் ...
பிரிவுகள் அற்ற உறவுகள் வேண்டும்
பிரியும் நேரம் கண்ணால் சொன்னாள் ...

Thursday, August 18, 2011

ஒரு கவிதையின் பயணம் !...


கம்பனும் தாமரையும்
பயணித்த பாதை தான் !..
உன் மனமும் என் மனமும்
ஒருமித்த பாதை தான் !..
நீ பேசும் பேச்சுக்கே
பூ பூத்த பாதை தான் !..
செந்தமிழில் நீ பாட
தேன் சுரக்கும் பாதை தான் !..

மழைத்துளிக்கு காத்திருந்தேன்
கவியருவி பொழிகின்றாய் !..
என் உயிர்வலியில் ஒரு துளியை
உணர்வாக புனைவாயோ ?

நிலமெல்லாம் நிலவாக
நீ நடந்து செல்கின்றாய் !..
என் கனவெல்லாம் நனவாக
கவியொன்றை சொல்வாயோ?

உலகில் உள்ள கவிகள் எல்லாம்
ஒன்றாய் கூடி, நன்றாய் பாடி
முயன்று பார்த்து தோற்று போயினர்
உன் கண்கள் பேசிய கவிதைகள் கோடி !..

நீயே கவிதைகள் பாடினால் ...

நெடுவனங்கள் சருகாகி
பூவனங்கள் ஆகுமடி ...
கொடும்புலியும் பொன்மானும்
காதல் சொல்லி திரியுமடி ...

இயற்கையை மாற்றாதே
பூமி இங்கு தாங்காதடி ...
காதல் ஒளி கூட்டாதே
சூரியன் மட்டும் போதுமடி ...

ஊற்றெடுத்த முதல்கவியில்
சிறகுகள் முளைக்குதடி !..
முற்றுப்புள்ளி வேண்டாமென
இதயங்கள் துடிக்குதடி !..

- கவி பாடும் என் தேவதைக்கு !

Monday, August 15, 2011

ரொம்ப அழகா இருக்கு !...


தமிழ் அழகா ?
தமிழ் பேசும் இதழ் அழகா ?...

இசை அழகா ?
இசை கொஞ்சும் சிரிப்பழகா ?...

இருள் அழகா ?
இருள் கவிழும் குழல் அழகா ?...

நிலவு அழகா ?
நிலவாய் குளிரும் முகம் அழகா ?...

மேகம் அழகா ?
மேகமாய் மிதக்கும் அவள் தேகம் அழகா ?...

இளமை அழகா ?
இளமையில் இவள் மட்டும் அழகா ?...

உண்மை அழகா ?
உண்மையை மறைக்கும் அவள் கண்மை அழகா ?...

பாவங்கள் அழகா ?
பாவங்கள் செய்யும் அவள் பார்வைகள் அழகா ?...

பருவங்கள் அழகா ?
பருவத்தில் பூரித்த துருவங்கள் அழகா ?...

மர்மங்கள் அழகா ?
மர்மமாய் இருக்கும் அவள் மச்சங்கள் அழகா ?...

முத்தங்கள் அழகா ?
முத்தங்கள் விட்டுச்செல்லும் எச்சங்கள் அழகா ?...

மோகங்கள் அழகா ?
மோகத்தில் எரியும் நம் தேகங்கள் அழகா ?...

தோல்விகள் அழகா ?
தோற்ற பின்னும் சிரிக்கும் வேள்விகள் அழகா ?...

காமங்கள் அழகா ?
காமம் தீர்ந்தும் வாழும் காதல்கள் அழகா ?...

காதல் அழகு !
காதலும் காதலிக்கும் என் காதலி அழகு !!!

Tuesday, August 09, 2011

தொண்ணூறு வயசுல !...


தொண்ணூறு வயசுல
தடி ஊணி நடக்கறப்ப கூட,
அவ சிரிச்சா எனக்கு பிடிக்கணும் ...
என் பாட்ட அவ ரசிக்கணும் ...

கையோட கை சேர்த்து
மடி மேல தலை சாய்ச்சி,
அவ கண்ண பாக்கறப்ப
முப்பது வயசுல மொளைச்ச காதல்
முடியாத வயசுலயும் முத்தமா பூக்கணும் ...

காமம் முழுசும் கரைஞ்சி போய்
காதல் மட்டும் மிச்சம் இருக்குற
அந்த ஒத்த முத்தத்துல
ஒரு கோடி கவிதைகள் அவளுக்காக
நான் பாடணும் ...

சுருக்கம் விழுந்த கையால
இறுக்கமா அவளை புடிச்சி
நெருக்கமா பக்கம் வந்தாலும்
வெட்கத்துல அவ விலகி போகணும் ...

ஓரக்கண்ணால அவ வெட்கத்த
ஓராயிரம் முறை ரசிச்சிட்டு,
அந்த காதோர மச்சத்துக்கு
கம்பனா நான் மாறனும் ...

கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும்
முட்டிட்டு நிக்கற கடலையும் வானத்தையும்
உள்ளங்கையில் அவளை வச்சி
உயர பறந்து தாண்ட வேணும் ...

பேரன் பேத்தி எடுத்த வயசுல
கிழவனும் கிழவியும் கொஞ்சறத பாரு-னு
ஊரு உலகம் எல்லாம் கேலி செய்ய
உற்சாகமா காதல் செய்யணும் ...

கால் வலி-னு ஒரு நாள்
அவ என் காலடியில உக்காந்தா
தோள் வலி-னு கூட பாக்காம
குழந்தையா அவளை சுமக்கனும் ...

பேரக் குழந்தைங்க ஆளான பொறவும்
என் மாரு மேல தான் அவ தூங்கணும்
காலம் முடிஞ்சி போனதை கூட
தெரியாம தான் நாங்க போகணும் !...

உசுருக்குள்ள உசுர வச்சி, எமனையும் ஏமாத்தி
ஒத்த பாசக்கயிரு-ல ரெண்டு உசுரும் பிரியணும் ...
ஒரே சமாதியில ஒண்ணா ஒருக்களிச்சி படுக்கணும்
மண்ணா மக்குன பொறவும் கூட, ஒண்ணா பூமியில் கலந்திருக்கணும் !...

Related Posts Plugin for WordPress, Blogger...